வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் கூறியவை...
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறுமா? என்பது நாளை (அக். 22) கூற முடியும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (அக். 21) தெரிவித்துள்ளார்.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர்,
Advertisement
Advertisement
''தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது.
தெற்கு அந்தமான் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னையில் மிக கனமழை பெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை தமிழகத்தில் இயல்பை விட 59% மழை பெய்துள்ளது.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 மணிநேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அக். 1 முதல் அக். 21 வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 16 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!