அடையாறு முகத்துவாரப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு
அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தது பற்றி...
அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.
அடுத்தடுத்து புயல் சின்னங்களால் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் வேகமாக நீர் நிரம்பி வருகின்றது. இதனால், ஏரிகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகின்றது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அடையாறு ஆறு வழியாக கடலில் கலந்து வருகின்றது.
இந்த நிலையில், அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியான சீனிவாசபுரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தூர்வாரும் பணிகளை இன்று காலை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.