நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் என். ஆனந்த்
சென்னையில், கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் தொடக்கி வைத்தது பற்றி..
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேட்டில் இன்று கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி தன்னார்வல அமைப்புடன் இணைந்து நடைபெறுகிறது.
சென்னையில், கூவம், அடையாறு, கொசஸ்தலை போன்ற ஆறுகளும் பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு போன்ற வடிவால்களும், வேளச்சேரி ஏரி, புழல் ஏரி, நாராயணபுரம் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, கோவிலம்பாக்கம் எரி போன்ற ஏரிகளையும், கரையோரங்களையும் முகத்துவாரங்களையும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தூர்வாரி பராமரிக்கும் பணி இன்று தொடங்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
சென்னையில் மட்டும் 60 கி.மீ. நீளத்துக்கு ஆறுகள், 54 கி.மீ. நீளத்துக்கு கால்வாய்கள், 3700 ஹெக்டேர் பரப்பளவில் ஏரிகள் அமைந்துள்ளன. இவற்றை முழுமையாக தூர்வாரி பராமரிக்க தமிழக அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இன்று கோயம்பேடு அருகில் உள்ள கூவம் நதிப் பகுதி மற்றும் ஒக்கியம் மடுவு ஆகிய இடங்கள் தூர்வாரும் பணி தொடங்கியது. நாளை, மணப்பாக்கம் அருகே, அடையாறு ஆற்றுப்பகுதி, சோழிங்கநல்லூர் அக்கரை பாலம் அருகே தெற்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட இடங்கள் தூர்வாரப்படுகின்றன.
ஜூலை 29ஆம் தேதி வேளச்சேரி ஏரி, நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளும் தொடங்கி வைக்கப்படுகின்றன.
முன்னதாக, இன்று காலை கோயம்பேடு வந்த அமைச்சர் என். ஆனந்த் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், உடனடியாக இரு சக்கர வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு தூர்வாரும் பகுதிக்கு அவரே ஓட்டி வந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூர்வாரும் பணிகளைத் தொடக்கிவைத்ததோடு, அங்கிருந்து சென்றுவிடாமல், கூவம் ஆற்றங்கரைக்கே நடந்து சென்று, அங்கு தூர்வாரும் பணிகளை நேரில் கள ஆய்வு நடத்தினார்.
முதலில், ஆறு முழுவதும் படர்ந்திருக்கும் கழிவுகள் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பிறகு தூர்வாரும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.
Minister N. Anand inaugurated the desilting work on water bodies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.