வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை?
வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்டிருப்பது பற்றி...
வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே நிதி நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் அருகிலுள்ள வரக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் ஈஸ்வரமூர்த்தி (41). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வட்டித் தொழில் செய்து வந்தார். வெள்ளக்கோவில் பகுதியில் இடம், நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி பெங்களூரு செல்வதற்காக சனிக்கிழமை இரவு பேருந்துக்காக வெள்ளக்கோவில் புறப்பட்டுள்ளார். அவரும், அவருடைய தந்தை இருவரும் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் சென்றுள்ளனர்.
Advertisement
வரக்காளிபாளையம் அருகே வள்ளியிரச்சல் சாலை பிரிவில் பின்னால் வந்த டாடா சுமோ கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த தந்தை, மகன் இருவரையும் காரில் வந்த கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அவ்வழியே வந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஈஸ்வரமூர்த்தி உயிரிழந்தார். அவருடைய தந்தை சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நிலத் தகராறில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.