இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு தொடர்பாக...
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(செப். 21) சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் ‘மோடி யுவா ரன்’ எனும் மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.
Advertisement
Advertisement
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் , மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வியூகம், அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்தும் , பாஜக - அதிமுக இணைந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில், இபிஎஸ் - நயினார் நகேந்திரன் இடையேயான சந்திப்பு அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அண்மையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
BJP state president Nainar Nagendran met AIADMK general secretary Edappadi Palaniswami in Salem.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.