விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று(ஏப். 8) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் தவெக, சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் திடல், வடலூர் நான்குமுனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்குமுனை சந்திப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நாளை 9 ஆம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப். 12 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், விஜய்யின் வாகனத்தை பின் தொடரக்கூடாது, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தவெக சார்பில் செய்து தர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு 5,000 பேர் வரை அனுமதிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.