தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
திருப்பூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் வேட்பாளர், 7 பெண்கள் உள்பட 9 பேர் மயக்கம் அடைந்தனர்.
திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரத்தில் வேட்பாளர், 7 பெண்கள் உள்பட 9 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Advertisement
கடும் நிபந்தனைகளுடன் விஜய் சாலைவலம் மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சேலம் 6 வழிச்சாலை வழியாக திருப்பூருக்கு பிரசார வாகனத்தில் விஜய் சென்றுக்கொண்டிருந்தார்.
பெருமாநல்லூரில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் காலை முதலே விஜய்யைக் காண்பதற்காக காத்திருந்தனர். விஜய் வருகைக்காக சாலைகளில் கூடியிருந்த மக்களுக்காக தவெக சார்பில் தண்ணீர், குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டு வந்தது.
எனினும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெண்கள் சிலர் அடுத்தடுத்து மயங்கினர்.
கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை வரவேற்றபோது கடும் வெய்யிலால் மயக்கம் அடைந்தார். அவரை தவெக ஆதரவாளர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
இதனிடையே திருப்பூரில் விஜய் வருகைக்காக காத்திருந்தவர்களில் 7 பெண்கள், ஒரு ஆண், வேட்பாளர் சுகுமார் என 9 பேர் மயங்கியுள்ளனர். மயங்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரசாரத்துக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தும் கடும் வெய்யிலில் குழந்தைகளுடன் பெண்கள் பலர் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.