மக்கள் மனதைவிட, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதலிடம் பிடிப்பதே முக்கியம்! ஏன்?
வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கே இடம்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி..
வாக்காளர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படித்தான் பெயர்கள் அச்சிடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பட்டியல் பொருத்தப்படுகிறது.
முதலில், மத்திய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறும். அடுத்து, அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்து இடம்பெறும். சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் இறுதியாக இடம்பெறும். கடைசியாக நோட்டாவுக்கு இடம் கிடைக்கும்.
இவ்வாறு வேட்பாளர்களின் பெயர்கள் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவில் உள்ள பெயர்களும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படுகிறது.
Advertisement
இதில், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அமைகிறது, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். இவ்வாறு அதிகபட்சமாக 24 இயந்திரங்கள் வரை இணைக்க முடியுமாம்.
தற்போது நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இங்கு 80 வேட்பாளர்கள் உள்ளன.
பொதுவாக, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர் இடம்பெறும் இடமும்கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இளம்தலைமுறையினர் முன்கூட்டியே வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர் எங்கே இருக்கிறது என்று பார்த்துக் கொள்வார்கள். ஆனால் முதியவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று பிறகுதான் வேட்பாளர்களை தேடுவார்கள் என்றால், சற்று சிரமம்தான்.
அதிலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முதல் இடத்தில் பெயர் கிடைத்துவிட்டால், அந்த வேட்பாளர்களுக்கு ஜாக்பாட்தான். அதிலும் சில கிராமங்களில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் செல்பவர்களாக இருந்தால், முதலில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கும் அதிக வாக்குகள் விழும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட கடைசி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் பெயர்களுக்கும் சற்று சவால்தான் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.
இவர்களை எல்லாம் விட, இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடுவில் இடம்பெற்ற அதிகம் பிரபலமடையாத வேட்பாளர்களின் பெயர்களை வாக்காளர்கள் பார்க்கக் கூட நேரமிருக்காது என்றே கூறப்படுகிறது.
எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வேட்பாளரின் பெயர் எங்கே இடம்பெறுகிறது என்பது கூட, அவரது வெற்றி தோல்வியை தீர்மானிக்கலாம் என்றே இப்போதும் கருதப்படுகிறது.