பொன்னேரி: பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடவில்லை!
பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றது பற்றி..
பெரியாரின் கொள்கைகளை பாஜகவினர் அழிக்க நினைக்கிறார்கள் என பொன்னேரியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் செய்யும்பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று(ஏப். 18) சென்னை வந்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று(ஏப். 18) தமிழகத்தில் 3 இடங்கள் பிரசாரம் செய்து வருகிறார்.
Advertisement
இன்று காலை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசும்போது 'இந்தியா கூட்டணி வேட்பாளர்கள்' என்றே பேசிய நிலையில் 20 நிமிட உரையின் இறுதியில், 'திமுக, காங்கிரஸ், பிற கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவளியுங்கள்' என்று கூறினார்.
ஆனால், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பெயரை ஓரிடத்தில்கூட குறிப்பிடவில்லை.
ஏற்கெனவே திமுக கூட்டணி, தமிழக காங்கிரஸ் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல இன்றைய கூட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, பெரியார் பற்றி பேசியுள்ளார்.
"அதிமுகவினர் மோடி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார்கள். ஆர்எஸ்எஸ், பாஜக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
பெரியாரின் கொள்கைகளை பாஜகவினர் அழிக்க நினைக்கிறார்கள். பெரியாரின் தத்துவங்களை நசுக்கப் பார்க்கிறார்கள், அவருடைய சமூக நீதிக் கொள்கைகளை அழிக்க பார்க்கிறார்கள். நான் எங்கு இருந்தாலும் தமிழ் மக்களுடன் இருப்பேன். தமிழ் மொழி, கலாசாரத்தைப் பாதுகாப்பதில் ராகுல் காந்தி என்றும் உடனிருப்பேன்" என்று கூறினார்.