மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்
திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியது குறித்து...
மக்கள் பிரச்னைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் செவி சாய்த்ததில்லை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஏப். 19) விமர்சித்தார்.
ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 19) பிரசாரம் மேற்கொண்டார். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரசார மேடையில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
Advertisement
பல மாதங்களாக மெளனமாக இருந்துவிட்டு தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற நாடகமாடுகிறது பாஜக. பெண்களுக்கு எதிரானது பாஜக அரசு என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்.
மோடி அமைதியாக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றியால் மட்டுமே முடியும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் வாக்குகளால் மட்டுமே தொகுதி மறுவரைறை மசோதாவை தடுக்க முடிந்தது.
2023 ஆம் ஆண்டே மகளிர் ஒட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்துவிட்டோம். ஆனால், அதனை காலம் தாழ்த்தி நிறைவேற்றத் துடிப்பது ஏன்?
மனு ஸ்மிருதியை பாதுகாப்பதே பாஜகவின் கொள்கை. பாஜக ஆளும் பல மாநிலங்களில் பெண்கள் வன்முறைக்குள்ளாகிறார்கள். ஆனால், அவற்றை ஒருநாளும் மோடி கண்டித்ததில்லை. நாட்டின் எந்தவொரு பிரச்னைகள் குறித்தும் பேசாதவர் பிரதமர் மோடி.
மக்களின் பிரச்னைகளுக்கு ஒருநாளும் செவிசாய்த்ததில்லை. பணமதிப்பிழப்பு கொண்டுவந்தார். அதனை ஏழைகளுக்காக செய்தாரா?
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்னைகளை அறிந்தார். மோடி அதுபோன்று ஏதாவது செய்துள்ளாரா? ஆட்சி அதிகாரம் ஒன்றே பிரதமரின் குறிக்கோள்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். தமிழ்நாடு, கர்நாடகம், தெலங்கானா, கேரளம் போன்ற மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தின. அதற்கு தொகுதி மறுவரையறை மூலம் தண்டனை கொடுக்கப்படுகிறது.
இத்தகைய ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள், பெண்கள் என பலரும் இணைந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒரே சிந்தனை உடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஸ்டாலின் தனி ஆள் இல்லை, அவருக்கு பின்னால் இந்த நாடே ஆதரவாக உள்ளது. காங்கிரஸும் அவருக்கு ஆதரவாக உள்ளது என கார்கே குறிப்பிட்டார்.