காமராஜர், திமுக அரசின் திட்டங்கள் பற்றிப் பேசிய ராகுல் காந்தி!
குளச்சலில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு...
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து தனது பணியைச் சிறப்பாக செய்வதாகவும் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இன்று காலை தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக - ஆர்எஸ்எஸ், அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தொடர்ந்து காமராஜர் பற்றியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசின் திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார்.
Advertisement
"தமிழகம் வரும்போதெல்லாம் மாபெரும் தலைவரான காமராஜர் பற்றி நான் நினைப்பேன். சமூக நீதி மற்றும் கல்வியில் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் அவரது பங்களிப்பிற்காகவும் இன்றும் நினைவுகூரப்படுகிறார். அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் என்றும் நினைவுகூரப்படும். அவர் எப்படி கல்வித் திட்டங்களை விரிவுபடுத்தி தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று கூறினார்.
தமிழ்நாட்டில்தான் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் முதலில் நிறைவேற்றப்பட்டன. எங்கள் கூட்டணியில் உள்ள திமுகவின் தலைவர், முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார் என்று நான் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், தமிழகத்தில் 1.31 கோடி மகளிருக்கு 1,000 உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் காங்கிரஸ், தமிழக மக்களுக்கு 6 முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறது.
பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகை,
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,000,
கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2,000 உதவித்தொகை,
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 2,500,
300 நாள்களுக்குள் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். உள்ளூர் மக்களுக்கு குரூப் சி, டி பிரிவில் 60% பணியிடங்கள் நிரப்பப்படும்.
முதல்முறையாக சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப் பதிவு இலவசமாக வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.