இருசக்கர வாகனத்தில் வானதியுடன் அண்ணாமலை பிரசாரம்!
இருசக்கர வாகனத்தில் வானதியுடன் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டது தொடர்பாக....
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இருசக்கர வாகனத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் வடக்கு பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சிவசக்தி காலனி பகுதியில் வானதி சீனிவாசன் இன்று(ஏப். 21) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இருசக்கர வாகனப் பேரணியை தொடக்கி வைத்தார். அவரின் வாகனத்தில் வானதி சீனிவாசன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக, அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த அண்ணாமலை, ”தேர்தல் கணிப்புகள் எல்லாம் நமக்கு சாதகமாக வர ஆரம்பித்துவிட்டது. மக்கள் எப்போதும் வாக்குப் பெட்டியில்தான் பேசுவார்கள். அதனை ஏப்ரல் 23 ஆம் தேதி பேசப் போகிறார்கள்.
செந்தில் பாலாஜி எப்பொழுதுதான் அவரது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்? நாளை மறுநாள் வரை காந்தியவாதி மாதிரி செந்தில் பாலாஜி பேசுவார், அவ்வாறுதான் இருப்பார், 23 ஆம் தேதி மக்கள் அவருடைய முகத்திரையை கிழிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் வலிமையாக இருக்க வேண்டும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிக ஆள்களை கொண்டு அவர்களது பணியை செய்ய வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்தபோதே வானதி சீனிவாசனின் வெற்றி உறுதியாகிவிட்டது, கோவை வடக்கு தொகுதியிலும் ரூ. 5000 ரூபாய் கொடுத்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் அது இந்தத் தேர்தலை பாதிக்காது” என்றார்.