ஜனநாயகக் கடமை ஆற்றத் தயாரா? சென்னையில் இரு நாள்களில் 9 லட்சம் பேர் பயணம்!
தமிழகத்தில் பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து மட்டும் சுமார் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பதற்காக வாக்காளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் பணிபுரியும் லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதையொட்டி, மாநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
தேர்தலையொட்டி, சென்னையில் நாள்தோறும் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து ஊர் திரும்புவதற்கும் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து ஏப். 21, 22 ஆகிய தேதிகளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.
மேலும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி, நெல்லை, கோவைக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும்கூட இரு நாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சென்னையிலிருந்து மதுரை, நெல்லை, கோவை, நாகர்கோயில் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.