காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி புகழாரம்
வாக்களித்த பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி...
காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்த பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
Advertisement
"தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல், ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தலாக அமையும்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக பாராட்டினார்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்த பெருமை முதலமைச்சர் ஸ்டாலினையே சாரும்.
இந்தியாவின் எந்த ஒரு மாநில முதலமைச்சரும் சொல்லாத வகையில், தமிழகத்தை "ஒரு டிரில்லியன் டாலர்" பொருளாதாரமாக மாற்றுவோம் என்ற இலக்கை நிர்ணயித்து அவர் செயல்பட்டு வருகிறார்.
தற்போது அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேபோல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
தொழிற்சாலைகள் அதிகரிப்பால் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. கல்வி வளர்ச்சியில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும் சில குறிப்பிட்ட துறைகளில் முதலிடத்திலும் உள்ளது" என்றார்.
மேலும், விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட், பயிர் காப்பீட்டுத் திட்டம், நெல் மற்றும் கரும்புக்கான கூடுதல் கொள்முதல் விலை போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மதச்சார்பின்மை என்பது இந்தியா முழுவதும் உள்ள கொள்கை என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை வளர்ச்சிதான் அடிப்படை. அந்த வளர்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் சாத்தியமாக்கியுள்ளார். எனவே, அவர் தொடங்கிய பணிகளைத் தொடர மீண்டும் அவருக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.