தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வேங்கைவயல் கிராமத்தில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குள்ளான புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம மக்கள் இன்று(ஏப். 23) தேர்தல் வாக்குப்பதிவைப் புறக்கணித்தனர். கருப்புக் கொடியைக் கட்டி வைத்து அவர்களின் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்குள்பட்டது வேங்கைவயல் கிராமம். பட்டியலினத்தவர்கள் வசிக்கும் இங்குள்ள மேல்நிலை நீ்ர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிச. 26ஆம் தேதி காலை மனிதக்கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் பேசப்படும் சம்பவமாக மாறிய இந்தச் சம்பவத்தில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரைக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்த நிலையில், குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டுவதாகவும் கூறி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவைப் புறக்கணிக்கப்போவதாக சில நாள்களுக்கு முன்பிருந்தே வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமத்தினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை இந்தப் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வழக்கம்போல வாக்குப்பதிவு தொடங்கியது.
வேங்கைவயலைச் சேர்ந்த 69 வாக்காளர்களும் பிற்பகல் வரை வாக்களிக்க வரவில்லை. குடிநீர்த் தொட்டி அமைந்துள்ள பகுதியில் கருப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர்.
அதேநேரத்தில் இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களித்து வருகின்றனர்.