திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா
கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை தவெக ஒழித்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...
கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை தாங்கள் ஒழித்துள்ளதாக பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஆக. 3) தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு உச்சி மாநாடு 2026 நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
''தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என முதலமைச்சர் நம்பியுள்ளார். அதன் அடிப்படையில் இளைஞர்களுக்கான பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும்.
கடந்த ஐந்து ஆண்டு பட்ஜெட் எடுத்தால் கூறிய பட்ஜெட்டையே மீண்டும் காபி செய்து கூறுவார்கள்.
வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டுமானால் நமக்கு நோக்கம் தேவை, நோக்கம் இருக்க வேண்டும் என்றால் வெளிப்படை தன்மையான அரசு இருக்க வேண்டும். நம் அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படும் அரசாக செயல்பட்டு வருகிறது.
ஒரு அரசின் செயல்பாட்டிற்கு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். போக்குவரத்து, தொழில்நுட்பம், வணிகம் இது மூன்றும் ஒரு அரசுக்கு மிகவும் முக்கியம். இந்த மூன்று துறையிலும் தமிழ்நாடு அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது.
கடந்த கால ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் வாங்கிய ஊழலை நாங்கள் ஒழித்துள்ளோம். சலுகையின் முக்கிய பிரச்னை ஊழல். கடந்த 80 நாள்களில் அனைத்து வசதிகளையும் இணையவழி மூலமே பெறும் வழிவகையை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் ஊழல் இல்லாத முதல் மாநிலம் தமிழ்நாடு; ஊழல் இல்லா தமிழ் நாட்டில் முதலீடு செய்ய அனைத்து முதலீட்டாளர்களும் வரவேண்டும், நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களிலோ, அமைச்சரின் அலுவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து கோப்புகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம்.
உங்களுடைய முதலீட்டால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு புது வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் 19% வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் உள்ளார்கள். மூன்று வருடங்களில் சிறந்த முதலீட்டை தமிழ்நாட்டில் செய்தால் 400 சதவீதம் உள்கட்டமைப்பில் தமிழ்நாடு வளர்ச்சி பெறும்.
வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. தருமபுரி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி இந்தப் பகுதிகளில் பெண்கள் இன்றளவும் உயர்கல்வி படிக்காமல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு மாறும்'' என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
TVK eradicated the corruption of the DMK government Aadhav Arjuna
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.