5 ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்குத் திருப்பணி: பட்ஜெட்டில் அறிவிப்பு!
அடுத்த 5 ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி நடத்தப்படும்...
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி நடத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலையை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அடுத்த ஐந்தாண்டுகளில் 3,000 திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்து திருக்குடமுழுக்கு நடத்திடவும், 250 திருக்குளங்களைச் செப்பனிடவும், 75 மரத் தேர்களைச் சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் அதிக அளவில் வருகை புரியும் திருக்கோயில்களில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், குளியலறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் திட்டமிட்டுள்ளது.
திருக்கோயில்களில் நிர்வாக அறங்காவலர்களின் நியமனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தவெக அரசு பொறுப்பேற்ற உடன் மிகக் குறுகிய காலத்தில் விரைவாக 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் அறிவிப்பு வெளியிட்டு, அறங்காவலர்களை நியமனம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரூ. 418 கோடி அரசின் நிதி ஒதுக்கீட்டில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இத்துறையில் பல்வேறு கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் இந்த அரசானது, திருக்கோயில்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 708 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.