தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டுகளும், எதிர்ப்புகளும்...
தமிழ்நாட்டின் 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், புதியதாக அமைந்த முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை இன்று (ஆக. 5) காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு வரவேற்பு அளிப்பதாகவும், ஆனால், தனியார் மய முனைப்பு ஏற்கத்தக்கது அல்ல எனவும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அயல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ. 8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.
சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.
மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும்.
நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
CPIM has announced its welcome of the public welfare schemes outlined in Tamil Nadu's budget for the year 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.