வேளாண் பட்ஜெட்! உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம், வேளாண் கண்காட்சிகள்!
வேளாண் பட்ஜெட்டில் உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம், வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும் என அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026 - 27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு உதவும்வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை அமைச்சர் வினோத் வெளியிட்ட அறிவிப்பில்,
உழவர் செயற்கை நுண்ணறிவுத் (AI) திட்டம்
Advertisement
Advertisement
"சரியான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தகவல், சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகர்" என்பதை உணர்ந்துதான் விவசாயிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தி மண் வளம் மற்றும் பயிர் சாகுபடி குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரவழி கற்றலுக்கு (Machine Learning) உரிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வானிலை முன்னறிவிப்பு. மண் நலம் மற்றும் மண் வளம், பூச்சி, நோய் மேலாண்மை, பருவ நிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளும் சேவைகளும் வழங்கப்படும்.
இவற்றோடு சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் (Voice-First Agriculture Services), அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களது கைப்பேசி வாயிலாக எளிதாகப் பெறும் வகையில், 2026-27 ஆம் ஆண்டில் "உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்" செயல்படுத்திட மாநில நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
வேளாண் கண்காட்சி
நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், நன்னெறி வேளாண் செயல்பாடுகள். மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள்,மதிப்புக்கூட்டு இயந்திரங்கள். வேளாண் இயந்திரங்கள், இயற்கை வேளாண் முறைகள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேளாண் கண்காட்சி (Agri Expo), 3 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படும்.
இக்கண்காட்சியில் சாகுபடி முறைகள், வேளாண் சார்ந்த புதுமையான முயற்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு, பயிர் உற்பத்தித்திறன், விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்கத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.