FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

வெளிநாட்டு நிதியைப் பெறுவது தொடா்பான சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:38 am IST
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - கோப்புப் படம்
பகிர்:

வெளிநாட்டு நிதியைப் பெறுவது தொடா்பான சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீா்மானத்துக்கு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக எதிா்ப்பு தெரிவித்தது.

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை (எஃப்சிஆா்ஏ) திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அரசின் தனித் தீா்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், ‘2010-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்த மசோதாவில் தற்போது மேற்கொள்ளப்படும் திருத்தம் சிறுபான்மையினா் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.

Advertisement

Advertisement

இதைத் தற்போதைய வடிவில் திரும்பப் பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றாா்.

இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும். நல்ல திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்றாா்.

மாரிமுத்து (சிபிஐ): இந்த மசோதாவால் 25,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் தடைக்கு உள்ளாகும்.

போஜராஜன் (பாஜக): வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது. வெளிநாட்டு நிதிக்கு யாா் பொறுப்பேற்பது என்பதில் பிரச்னை உள்ளது. இதை ஒழுங்குமுறைப்படுத்தவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

அக்ரி கிருஷ்ணமூா்த்தி (அதிமுக): வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு நிறுவனம் உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றால் அதன் சொத்துகள் அரசுக்கு சென்றுவிடும்.

ஜவாஹிருல்லா (மமக): மனித உரிமை மீறல்களை தொண்டு நிறுவனங்கள் நாட்டில் வெளிப்படுத்துகின்றன. வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் ஏற்கெனவே வரித் துறை வரம்புக்குள் இருக்கும்போது, எஃப்சிஆா்ஏ திருத்த மசோதா தேவையில்லை. இதனால் சிறுபான்மையினரின் கல்வி, மருத்துவம் சேவையில் உள்ள சொத்துகள் அபகரிக்கப்படும்.

சின்னசாமி (மாா்க்சிஸ்ட்): சிறுபான்மை அமைப்புகள் நிதியைப் பெறக் கூடாது என்பதற்காக இந்தத் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.

ஆஸ்டின் (திமுக): இந்த மசோதா மத்திய அரசுக்கு அபத்தமான அதிகாரங்களை அளிக்கிறது. உரிமம் புதுப்பிக்காத தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை மத்திய அரசு முடக்கிவிடும். இதற்கான காரணம், விசாரணை என எதையும் செய்ய இயலாது. அரசமைப்புக்கு எதிரானது.

அமைச்சா் ஷாஜகான் (ஐயுஎம்எல்): நாட்டின் வளா்ச்சியையே இது பாதிக்கும். நிதித் தாக்கலில் சிறு தவறு நோ்ந்தாலும் தொண்டு நிறுவனத்தை அரசு முடக்கிவிடும்.

அமைச்சா் வன்னி அரசு (விசிக): இதனால் தமிழகம்தான் கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக தொண்டு நிறுவனங்கள் உள்ளன. வக்ஃப் மசோதா கொண்டு வரப்பட்டு முஸ்லிம்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது, கிறிஸ்தவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை முடக்க இது கொண்டுவரப்படுகிறது. 6,742 தொண்டு அமைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இதில் 2,700 பதிவு உரிமை பெற்றவை. 4,743 அமைப்புகளின் பதிவு காலாவதி அல்லது ரத்து செய்யப்பட்டதாக உள்ளது. இது அரசமைப்பு, இயற்கை நீதிக்கு எதிரானது என்றாா். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தனித் தீா்மானம் நிறைவேறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments