FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் பொய் சொல்லலாமா? கூடாதா? காரசார வாதம்

பேரவையில் பொய் சொல்லலாமா? கூடாதா? என்பது குறித்த காரசார வாதம் பற்றி..

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:56 pm IST
பேரவையில் - video grab
பகிர்:

தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு பதிலுரை ஆற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஒரு குட்டிக்கதை சொல்ல அதில் பொய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது குறித்து பேரவையில் காரசார வாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சட்டபேரவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி 2026 - 27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று முடிந்து, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று பதிலுரை ஆற்றினார்.

தன்னுடைய கன்னிப் பேச்சு என்று கூறி உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் மரிய வில்சன், தன்னுடைய பேச்சை ஒரு குட்டிக் கதையில் தொடங்க விரும்புகிறேன் என்று கூறி தொடங்கினார். அடுத்து இந்த நாட்டை ஆளப்போவது யார்? என்று ஒரு போட்டி வைத்திருந்தார் ஒருவர் பெரியவர். அதற்கு நிறைய இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் ஒரு விதையைக் கொடுத்தார். நீங்கள் அனைவரும் மூன்று மாதம் கழித்து இந்த விதையை மரமாக வளர்த்து பூக்களாக மலர்ந்து இருக்கும் போது இங்கு வாருங்கள் என்று கூறி அனுப்பினார்.

Advertisement

Advertisement

மூன்று மாதம் முடிந்தது. அனைத்து இளைஞர்களும் வந்திருந்தனர். பெரிய பெரிய தொட்டிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிய செடிகளுடன் அந்த பெரியவரிடம் வந்து நின்றார்கள்.

ஒருவர் மட்டும் ஒன்றும் வளராத நிலையில் பானையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து பலரும் சிரிக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள்.

அப்போது அந்த பெரியவர் சொல்கிறார் இவர்தான் வெற்றி பெற்றார். இவர்தான் தலைவராக தகுதி படைத்தவர் என்கிறார்.

நாங்கள்தானே செடியை வளர்த்துக் கொண்டு வந்துள்ளோம் என்று மற்றவர்கள் கேட்க, அதற்கு அந்த பெரியவர் சொன்னாராம். நான் கொடுத்த விதை வேக வைத்தது. அது ஒரு நாளும் முளைக்காது. எனவே, வெற்றி பெறுவதற்காக பொய் சொல்லாமல் குறுக்கு வழியை தேர்வு செய்யாமல் நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதை இவர் நிரூபித்துள்ளார் என்று கூறினார்.

அப்போது, அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், பொய் என்ற வார்த்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு உண்மைக்கு மாறாக என்ற வார்த்தை இடம்பெறும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு விளக்கம் கொடுத்த திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, பேரவை விதிகளின்படி, ஒரு உறுப்பினர் பொய் சொல்கிறார் என்றுதான் சொல்லக் கூடாதே தவிர, பொய் என்ற வார்த்தையே இடம்பெறக் கூடாது என்பது அர்த்தமல்ல. திருவள்ளுவரின் திருக்குறளைச் சொல்லும்போது அதில் பொய் என்ற வார்த்தை இடம்பெறும். அதனை மாற்ற முடியாது. எனவே, பொய் என்ற வார்த்தையை மாற்ற வேண்டியதில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

இதனைக் கேட்ட அவைத் தலைவர், நன்றி விளக்கம் கொடுத்ததற்கு என்று கூறினார்.

ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பொய் என்ற சொல் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் உண்மைக்கு மாறாக என்ற சொல்லைப் பயன்படுத்தினோம். நாங்கள் எல்லாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்படித்தான் இருந்தார்கள். நாங்கள் சொல்லும்போதெல்லாம் அந்த வார்த்தையை நீக்கினார்கள். (அவையில் சிரிப்பொலி) எனவே, அந்த மரபை தொடர்ந்து கடைபிடியுங்கள் என்று வலியுறுத்தினார்.

இதனால், பேரவையில் பொய் சொல்லலாமா? கூடாதா என்ற வாதம் சூடுபிடித்தது.

summary

Is it permissible to lie in the Assembly? A heated debate

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments