அதிக மின்கட்டணம் தொடர்பான நடிகை வைஷாலி விடியோ: மின்சார வாரியம் விளக்கம்!
அதிக மின்கட்டணம் தொடர்பான நடிகை வைஷாலி வெளியிட்ட விடியோவுக்கு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
அதிக மின்கட்டணம் தொடர்பாக, நடிகை வைஷாலி வெளியிட்ட விடியோ இணையத்தில் வைரலான நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதாக, சின்ன திரை நடிகை வைஷாலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” இரண்டு மூன்று மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துக்கொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமைதான். 200 யூனிட் இலவச மின்சாரம் என்பதை எடுத்துவிட்டு, முன்பாக இருந்தபடியே கணக்கீடு செய்யலாம். இதுபோன்ற சம்பவங்களால் தவெக ஆட்சியின் மீதான நம்பிக்கையைக் குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த விடியோ இணையத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) விளக்கம் அளித்துள்ளது.
அதில், ”இந்த காணொலியில் உள்ள மின் நுகர்வோர் தனக்கும் மற்ற பலருக்கும் அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75% மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மின் நுகர்வோர் தனது மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் மின்வாரியம் உடனடியாக அதை சிறப்பு ஆய்வு செய்ய எடுத்துக் கொள்ளும். மற்ற மின் நுகர்வோர்களும் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ அல்லது எக்ஸ்(X ) வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.
200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெய்யிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்” என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
The Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) has issued a clarification after a video released by actress Vaishali regarding high electricity charges went viral online.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.