சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’... திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு!
சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியுள்ளதைப் பற்றி...
சென்னை பக்கிங்காம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் தலைநகர் சென்னையை உலகத்தரத்திலான நகராக மாற்றும் வகையில், சாலை, கடல்வழி, மெட்ரோ, விமான போக்குவரத்து என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வாட்டர் மெட்ரோ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருந்தது.
அதன்படி, சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் நீர்வழி பக்கிங்காம் கால்வாயில், வாட்டர் மெட்ரோ திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்திருக்கிறது.
Advertisement
Advertisement
ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகள் வழியாக 796 கி. மீட்டர் தூரத்துக்குப் பயணிக்கும் பங்கிங்காம் கால்வாய், தமிழ்நாட்டில் மட்டும் 160 கி.மீ. செல்கிறது. இந்தக் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பு, கழிவு நீர் வெளியேற்றத்தாலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.
19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக திகழ்ந்த பக்கிங்காம் கால்வாயில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் இயக்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், தமிழக அரசின் 2026 - 27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல் செய்வதை அரசு உறுதி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலவே, போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் வாட்டர் மெட்ரோ தமிழ்நாட்டின் பக்கிங்காம் கால்வாயை தூய்மைப்படுத்தி ‘வாட்டர் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ டெண்டர் கோரியுள்ளது.
முதற்கட்டமாக, எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கி.மீக்கு படகுபோக்குவரத்து சேவை அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு கேரளத்தின் கொச்சியில் சுமார் ரூ. 1,000 கோடி திட்ட மதிப்பீட்டில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார். இந்தியாவின் முதலாவது வாட்டர் மெட்ரோ திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில் போன்றே குளிரூட்டப்பட்ட வசதி, தானியங்கி பயணச்சீட்டு வசதிகள் உள்ளன. கொச்சி வாட்டர் மெட்ரோவில் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்டர் மெட்ரோவுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
Chennai is exploring the possibility of introducing a Water Metro service along the Buckingham Canal, with a proposed 53-km route connecting Ennore and Mamallapuram. The project aims to improve public transport connectivity through waterways and provide commuters with an alternative mode of transportation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.