ரயிலில் சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்!
ரயிலில் சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்!
சென்னை சென்ட்ரலில் இருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
கூடுவாஞ்சேரியில் குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் ஒரு பெரிய பிரியாணி டபரா மூடி போட்டு, மைதாமாவால் சீல் வைக்கப்பட்டிருந்துள்ளது. டபாராவுக்குள் மனித உடல் பாகங்கள் வேக வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக பிரியாணி டபரா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
முதலில் கொலையானவர் ஆண் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பெண் என்பது தெரிய வந்துள்ளது.
குற்றவாளிகளின் சிசிடிவி புகைப்படங்களை காவல்துறை வெளியிட்ட நிலையில், கூடுவாஞ்சேரியில் இவர்கள் தங்கியிருந்ததாக சிலர் தகவல் அளித்திருந்ததைத் தொடர்ந்து விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரியில், மசூதி தெருவில் இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு காவல்துறையினர் வந்து ஆய்வு நடத்தினர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர், அங்கு மைதாமாவு போட்டு ஒட்டப்பட்டிருந்த பிரியாணி டபராவைப் பார்த்தனர். அதில், மனித உடல் பாகங்கள் வேகவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொலையானது யார்?
முன்னதாக கொலையாளிகள், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திலிருந்து, சடலத்தை வைத்த சூட்கேஸுடன் ரயிலில் ஏறியிருப்பது, மின்சார ரயிலில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலையாளிகள் வெளி மாநில நபர்கள் போல இருப்பதால், அவர்களது அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளைப் பார்த்து மக்கள் அளித்த தகவல் மூலம் அவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ஹைதுல் நிஷா என்பதும் இவர் தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர், கொலையாளிகளுடன் தங்கியிருந்த நிலையில் காணாமல் போனதாக அவரது மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
கொலையாளிகள் மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பகமதி மாஜிக் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது செல்போன் சிக்னல் மூலம், ஒடிசா தப்பிச் சென்றிருப்பதை அறிந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்ய ஒடிசா விரைந்துள்ளனர்.
உதவிய சிசிடிவி காட்சிகள்
சூட்கேஸில் மனித சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை காவல்துறையினர் 350 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சூட்கேஸை வைத்துச் சென்ற ஆண் - பெண் ஜோடியை கண்டறிந்தனர். தில்லி செல்லும் ரயிலில் சூட்கேஸை வைத்துவிட்டு, அவர்கள், சென்டிரலில் இருந்து வெளியேறி பூங்கா ரயில் நிலையம் சென்று தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறியது சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அவர்களது விவரம் தெரிய வராததால், அவர்களது விடியோ காட்சிகளை சென்னை காவல்துறை வெளியிட்டதன் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக்ரா சென்ற விரைவு ரயிலில் இருந்த சூட்கேஸில் துர்நாற்றம் வீசியதால், ரயில்வே காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தனர். அதில் தலையில்லாத சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பாலிதீன் கவரில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உடல் துண்டுகள் சென்னை துணிக்கடைப் பையில் இருந்ததை வைத்துத்தான், ஆக்ரா காவல்துறை சென்னையிலிருந்து சூட்கேஸ் ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்து சென்னை காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து சென்னை சென்டிரல் மற்றும் சென்னை பூங்கா ரயில் நிலையம் வரையிலான 350 சிசிடிவி கேமராக்களை, காவல்துறையினர் ஆய்வு நடத்தி, சூட்கேஸை எடுத்து வந்து வைத்துவிட்டுச் சென்ற தம்பதியை கண்டுபிடித்து தற்போது கைது செய்ய ஒடிசா விரைந்துள்ளனர்.
Body found in a suitcase on a train! Human remains discovered in a biryani vessel at the culprits' house!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.