யார் போட்ட பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் எதிர்க்கட்சி அமளி
சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டது குறித்து...
ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து திமுகவினர் தவறாகப் பேசியதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியநிலையில், சட்டப்பேரவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது, "ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் போட்ட பிச்சைதான் காரணம் என திமுகவின் அமைப்புப் பொதுச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதை மறக்க முடியுமா? யாருக்கும் யாரும் பிச்சை போடவேண்டிய அவசியமில்லை.
அம்பேத்கர் கொடுத்த உரிமையில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கொடுத்து, நாங்கள் வாங்கவேண்டிய நிலைமையில் நாங்கள் இல்லை.
Advertisement
Advertisement
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அம்பேத்கர் எழுதிவைத்த சட்டம். ஒடுக்கப்பட்ட சமூகம் குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக ஆர்.எஸ். பாரதி வருத்தமும் தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தவெக ஆட்சியில்தான் விடிவுகாலம் வரும் என்பதுதான் உண்மை" என்று தெரிவித்தார். அமைச்சர் ராஜ்மோகனின் இந்தப் பேச்சால், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகனுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரன் அறிவுறுத்திப் பேசியதாவது, "நீங்கள் கூறிய கருத்து, விமர்சித்துக்குள்ளாகி, அவரை (ஆர்.எஸ். பாரதி) அவர்களின் கட்சித் தலைமையே கண்டித்தது.
இதுபோன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிரச்னையில்லாமல், ஆக்கபூர்வமானவற்றை பேசலாம்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, கே.என். நேரு பேசியதாவது, "வெளியில் பேசியதை கட்சித் தலைமையே கண்டித்துள்ளது. அதனை சட்டப்பேரவைக்குள் கொண்டு வருகின்றனர்.
இங்கிருப்பவர்கள் யாரும் எந்த சாதிப் பாகுபாடும் பார்ப்பதில்லை. நீங்கள் யாரும் சாதிப் பிரச்னையைக் கொண்டு வராதீர்கள்" என்று தெரிவித்தார்.
DMK creates ruckus in the Legislative Assembly due to Minister Rajmohan's speech
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.