போதைக் கலாச்சாரத்திற்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
போதைக் கலாச்சாரத்திற்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியிருப்பது பற்றி....
போதைக் கலாச்சாரத்திற்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியை, போதையில் இருந்த இளைஞர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று, புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை பதறச் செய்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“தூய சக்தி” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் “போதை சக்தி”யின் பிடியில் சிக்கிக் கொண்டதாகத் தான் தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக்குகளை மூடிவிட்டதாக தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இளைஞர்களிடையேயான மதுப்பழக்கமோ, சமூகத்தில் போதையால் உண்டாகும் குற்றச்செயல்களோ குறைந்தபாடில்லை.
Advertisement
Advertisement
காவல்துறையினர் மீதோ தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் மீதோ குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. கடந்த மூன்று மாதங்களில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைவரது கைகளிலும் மதுப் புட்டிகளும், போதைப் பொருட்களும் மிக சரளமாக புழங்குகின்றன என்பதை சமூக வலைத்தளங்களில் உலா வரும் வீடியோக்களைப் பார்த்தாலே அறிந்து கொள்ளலாம்.
ஆனால், முதல்வரும் அவரது அமைச்சர்களும் “Reels” எடுப்பதில் காட்டும் ஆர்வத்தை, “Reality”-இல் உள்ள மக்கள் பிரச்னைகளில் காட்டுவதில்லை. இனியாவது எதிர்க்கட்சிகளிடம் எதுகை மோனை வசனம் பேசி காலத்தைக் கடத்தாமல், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் போதைக் கலாச்சாரத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
BJP State President Nainar Nagendran Stated That CM Vijay Must Put an End to the Drug Culture.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.