2029 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!
2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழக அரசியலில் உருவான சூறாவளி பற்றி..
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை இந்தியாவில் விரைவில் கொண்டு வரப்படும், அதனால், வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதே அனைத்து மாநிலங்களுக்கும் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், இது உறுதி செய்யப்படாத நிலையில், அது தொடர்பான பேச்சுகளும், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சைகளும் நாடு முழுவதும் எழுந்துவிட்டதோ இல்லையோ தமிழ்நாட்டில் ஓங்கி ஒலித்து வருகிறது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜார்ஜ் ராபின்சனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார், வருகிற 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தியே அடுத்த பிரதமராக வருவார்.
Advertisement
Advertisement
ஒருவேளை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்றுக்கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் தவெக அரசில் அமைச்சர் பதவியில் நீடிக்க மாட்டார்கள்.
இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம்தான், எங்கள் கட்சிதான் எங்களுக்கு பெரியது. கட்சி இல்லாவிட்டால் நாங்கள் ஒன்றுமே கிடையாது.
இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு இந்தப் பதவியை விட்டுச் செல்ல வேண்டும் என்று சொன்னால், அடுத்த நிமிடமே பதவியை ராஜிநாமா செய்து விடுவோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கடைநிலைத் தொண்டருடைய முகம் ராகுல்தான். ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும். அதை நிறைவேற்றியே தீர்வோம் என்று சபதம் செய்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
அண்மையில், வரும் 2029 மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் சிஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாகுமா என்ற பேச்சுகள் நிலவி வந்தன.
மற்றொரு பக்கம், தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று தவெகவின் சமூக வலைத்தள மீம்ஸ்கள் வெளியாகி விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
தமிழக முதல்வர் விஜய் பாகிஸ்தான் சென்றார் என்பது முதல் பல தவறான தகவல்கள் அதுவும் சமூக வலைத்தளத்தில் பரவலாக அறியப்படும் ஹிந்தி பேசும் நபர்கள் மூலம் நாடு முழுவதும் ஹிந்தியில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு அதனை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்தும் வருகிறார்கள். இது தமிழக முதல்வரின் அடுத்தகட்ட நகர்வோ என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சமூக வலைத்தள மீம்ஸ்கள் காரணமாகவே, அடுத்த பிரதமர் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திதான் என்றும், இதனை தவெக ஏற்காவிட்டால் அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்றும் அமைச்சர் பேசியிருக்கிறார்.
Who is the next PM candidate? whirlwind has emerged TN
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.