சென்னையில் பொதுப்போக்குவரத்தை ஒன்றிணைக்கவும், மக்கள் பயன்படுத்த எளிதாக, நவீனமாக மாற்றும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சென்னை ஒன் செயலி மூலம் இதுவரை 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் முதல் 10 லட்சத்தைத் தொட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை முழுக்க முழுக்க எண்ம மயமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை புறநகர் மற்றும் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகள் என அனைத்தையும் இந்த சென்னை ஒன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பதால், மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை மாநகா் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காகவும், பணமில்லா பரிவா்த்தனையை அதிகரிக்கும் நோக்கிலும் ‘சென்னை ஒன் செயலி’ தொடங்கப்பட்டது. இந்த செயலியை ஏராளமான பயணிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, சென்னை மாநகா் பேருந்து பயணிகள் ரூ.1000 மற்றும் ரூ.2000-க்கான பேருந்து அட்டைகளையும் சென்னை ஒன் செயலியின் மூலமாகப் பெறும் வசதியும் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.
பயணிகள் மாதம் தோறும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெறும், ரூ.1000-க்கான கோல்டு அட்டை மற்றும் ரூ.2000-க்கான டயமண்ட் சலுகை பேருந்து அட்டைகளையும் ‘சென்னை ஒன்’ செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி மக்களுக்கு கூடுதல் வசதியாக அமைந்திருக்கிறது.
ஜனவரி மாதம் 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை என்ற நிலை இருந்தது. ஆனால், பிப்ரவரி இரண்டாம் வார தொடக்கத்திலேயே சென்னை ஒன் செயலி மூலம் 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.