அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு!
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பற்றி...
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அரசு அலுவலர்கள் நலன் குறித்து அவர் பேசியதாவது:
”அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களிடம் எடுத்துச் செல்ல பெரும்பங்கு வகிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காப்பதில் இந்த அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.
அனைத்து தடைகளையும் கடந்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலன்களை தமிழக அரசு காத்து வருகின்றது. நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி தொகை வழங்கப்பட்டது. ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாக பெற்றுக் கொள்ளும் நடைமுறை மீண்டும் அரசு செயல்படுத்தியது.
அரசு பணியாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ. ஒரு கோடி, இயற்கை மரணமடைந்தால் ரூ. 10 லட்சம் காப்பீடு கொடுக்கப்பட்டது. திருமண முன்பணம், பண்டிகை முன்பணம் போன்றவற்றை அரசு உயர்த்தி வழங்கியது. பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அரசு உயர்த்தியது.
அனைத்துக்கும் மகுடமாக அமையும் வகையில், அரசுப் பணியாளர்களில் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான பணத்தை பெறுவார்கள். கடைசி மாத சம்பளத்தில் 50 % மாத ஓய்வூதியம் வழங்கப்படும். இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசின் கூடுதல் பங்களிப்புக்காக ஓட்டுமொத்தமாக ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.