மார்ச்சில் இருமுறை தமிழ்நாடு வரும் மோடி!
பிரதமர் மோடியின் தமிழக பயணம் பற்றி...
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வருகின்ற மார்ச் மாதத்தில் இருமுறை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக - பாஜகவுடனான கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்துள்ளன.
Advertisement
Advertisement
கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமரின் வருகைக்கு முன்னதாகவே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.