ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நிலை குறித்து...
வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை-தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து, பின்பு ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்கு இலங்கை-தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து பின்பு ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (பிப். 20) இரவு வரை வறண்ட வானிலையுடன் பகலில் வெய்யிலும், இரவில் பனிப்பொழிவு/குளிர் தொடரும்.
தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் பிப். 21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாள்கள் தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும்.
மழையின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அறுவடை பணிகளுக்கு இடையூறு அளிக்கும் மழையாக அமையும்.
சம்பா, தாளடி அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் பிப். 20 வரை அச்சமின்றி அறுவடைப் பணிகளை மேற்கொள்ளலாம், அறுவடை செய்த தானியங்களை மழைச்சாரல் படாதவாறு பத்திரப்படுத்துவது அவசியம்.
முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணம்கருதி பிப். 21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாள்கள் மட்டும் அறுவடைப் பணிகளை ஒத்திவைப்பது நல்லது.
அறுவடையின்போது லேசான மழை பெய்தாலே தானியங்கள் வீணாகிவிடும் என்பதால்தான், 3 நாள்கள் ஒத்திவைக்க பரிந்துரைக்கிறேன். நெல் அறுவடை மட்டுமல்லாது உள் மாவட்டங்களில் வெங்காயம், சோளம், பருத்தி போன்ற அறுவடைப் பணிகளை சற்று ஒத்திவைப்பது சிறந்தது.
கனமழைக்கோ, அறுவடைப் பணிகளை தொடர்ந்து பாதிக்கும் அளவிற்கோ பெரும் மழையாக அமையாது.
பிப். 24 ஆம் தேதி முதல் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து அறுவடை பணிகளுக்கு ஏற்ற சூழல் உருவாகும்.
தமிழக விவசாயிகள் பயம், பதற்றமின்றி அறுவடைப் பணிகளை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மீனவர்கள் பிப் 21,22 ஆகிய இரண்டு நாள்கள் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லாமல் இருப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Delta Weatherman Hemachandran has advised farmers to take precautions due to the low pressure area prevailing in the south-central Bay of Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.