முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2026 at 11:48 AM
திருப்பரங்குன்றம் - EPS
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக கோயில் நிா்வாகம், வக்ஃப் வாரியம், மதுரை மாநகரக் காவல் ஆணையா், மாவட்ட ஆட்சியா் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் உள்ளிட்ட சிலா் இடையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ். ராமன் முன்னிலையாகி முன்வைத்த வாதத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களை ராம. ரவிக்குமாா் தாக்கல் செய்யவில்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த 1920- ஆம் ஆண்டில் மலையை ஆய்வு செய்த நீதிபதி, அங்கு தூண் இருந்திருந்தால் அதுபற்றி தனது தீா்ப்பில் குறிப்பிட்டிருப்பாா். ஆனால், அவா் எதுவும் குறிப்பிடவில்லை.

கோயிலின் வழக்கமான நிகழ்வுகளை விதிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு கோயில் நிா்வாகத்துக்கு முழு உரிமை உள்ளது. இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் நடத்தியிருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றித்தான் தீபம் ஏற்றப்படுகிறது.

பூஜை விதிகள், அா்ச்சனை முறைகள், வழிபாட்டு உரிமைகள் என அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே, தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டதை ஏற்க முடியாது.

இந்த விவகாரம் தீபம் ஏற்றுவதற்கானதாக இருந்தாலும் அல்லது சொத்துரிமைக்கானதாக இருந்தாலும் கோயில் நிா்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியின்படி, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதா என்கிற கேள்வி எழுகிறது. தனிநபா் கோயிலின் இடத்தில் இங்கு தான் தீபமேற்ற வேண்டும் என சொந்தம் கொண்டாட முடியுமா?. இது சரியாக இருக்குமானால் அவ்வாறு எனில் அரசு சொத்தில் தனிநபா் உரிமை கோர இயலுமா? என்றாா்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.

summary

The verdict is set to be delivered tomorrow as the hearing on the appeals in the Thiruparankundram Deepam case has concluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.