திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! தவெக அரசுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது!
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றத் தடை விதித்தவர்களின் நிலை, தவெகவுக்கும் வந்துவிடக் கூடாது என திருப்பரங்குன்ற வழக்கின் மனுதாரர் ராம. ரவிக்குமார் கூறியது பற்றி...
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற தடை விதித்தவர்களின் நிலை, தவெகவுக்கும் வந்துவிடக் கூடாது என திருப்பரங்குன்ற வழக்கின் மனுதாரர் ராம. ரவிக்குமார் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலின் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தி வழக்கு தொடர்ந்த ராம. ரவிக்குமார், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறி, திருப்பரங்குன்றம் கோயிலில் வேல் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, "திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபமேற்றுமாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தும், அந்த உத்தரவை முந்தைய அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆட்சியில் அரசு மேல்முறையீடு செய்தது.
Advertisement
Advertisement
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செய்ததன் விளைவாகவே, திமுகவுக்கு எதிராக தேர்தல் முடிவு அமைந்தது.
ஆகையால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நடைமுறையே பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் கூறுவது ஏற்கத்தக்கதல்லை.
தீபமேற்றுவதற்குத் தடை விதித்தவர்களெல்லாம், தற்போது வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களின் நிலைமை, தவெக அரசுக்கும் வந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.