இருளில் மூழ்கிய கோடிக்கோட்டை சுங்கச்சாவடி! கட்டணமின்றி சென்ற வாகனங்கள்!
தேவக்கோட்டை அருகே கோடிக்கோட்டை சுங்கச்சாவடி இருளில் மூழ்கியது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திருச்சி - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் கோடிக்கோட்டை சுங்கச்சாவடி மின்தடையால் இருளில் மூழ்கியதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து சென்றன.
தேவகோட்டை அருகேயுள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின் இணைப்பு வரவில்லை.
மேலும், இந்த சுங்கச்சாவடியில் உள்ள ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாததால் இயங்கவில்லை. இதன் காரணமாக சுங்கச்சாவடி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
Advertisement
Advertisement
குறிப்பாக சுங்க வசூல் செய்யும் பகுதி மற்றும் அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியதால் சுங்கச்சாவடி இயங்கமுடியாமல் போனது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களும் அதிலிருந்த பயணிகளும் குழப்பமடைந்தனர். அப்பகுதி முழுவதும் இருட்டாக இருந்ததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது எரிபொருள் இல்லாததால் சுங்கச்சாவடி மூடப்பட்டது எனவும், அனைத்து வாகனங்களும் கட்டணமின்றி சென்றதாகவும் தெரிவித்தார்.