ஜன நாயகன் பிரச்னை: ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை வழங்காமல் மத்திய அரசின் தணிக்கை வாரியம் தாமதப்படுத்தி வரும் நிலையில், அந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜன நாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முதல்முறையாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”‘ஜன நாயகன்’ திரைப்படத்தைத் தடுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஒரு தாக்குதலாகும்.
தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் மோடி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே மெர்சல் பட விவகாரத்தின் போது, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.
அப்போது ராகுல் வெளியிட்ட பதிவில், ”மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு - இறக்கச் செய்யாதீர்கள்” என்று குறிப்பிட்டிருப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.