தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் ஊடகர் கைது: காவல் துறை விளக்கம்!
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் வழக்கில் ஊடகர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறை விளக்கமளித்துள்ளதைப் பற்றி...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏக்களிடம் பேரம் வழக்கில் ஊடகர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையின் தவெக எம்எல்ஏ இளையராஜாவை தொடர்புகொண்ட ஒரு கும்பல், சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.35 கோடி தருவதாகவும் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
அந்த கும்பல், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவு ஏற்படும் என்றும் மிரட்டியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், இளையராஜா புகார் அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலர் காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ் உள்பட 9 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஊடக நெறியாளர் விஜயனை, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (ஜூலை 18) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்குச் சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார்விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை அரும்பாக்கத்தைச் சார்ந்த ஐபிடிஎஸ் (IPDS) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தினை நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் மேலும் சில நபர்களுடன் சேர்ந்து சட்டப்பேரவை வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூ. 35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும் அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கொடுத்தப்புகாரின் பேரில் டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேற்படி வழக்கின் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் மேற்படி திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து ‘மேகாலயா பிராஜக்ட்’ என்ற பெயரிட்டு சுமார் 15 த.வெ.க சட்டப்பேரவை உறுப்பினர்களை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கின் ஆவண சாட்சியங்களை ஆய்வு செய்த போது பத்திரிக்கை ஆசிரியர் விஜயன், மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி திருநாவுக்கரசு என்பவருக்கு ஆட்சேபகரமான வகையில் குறுத்தகவல் அனுப்பி குற்றச்சதியின் போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்.
இதுகுறித்து விசாரிப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர் விஜயன் என்பவருக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு நேற்றும் இன்றும் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வழக்கின் அவரது செல்போனில் வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அறிய சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்த அவரிடமிருந்து பெறப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The police have issued a clarification regarding the arrest of a media person in the case involving alleged horse-trading of MLAs from the Tamizhaga Vettri Kazhagam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.