ஒரே அறையில் திருச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள்: குறைகளை தெரிவிக்க முடியாமல் மருத்துவமனை பணியாளா்கள், நோயாளிகள் அவதி
ஒரே அறையில் திருச்சி அரசு மருத்துவமனை அதிகாரிகள் இருப்பது தொடர்பாக...
திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் ஒரே அறையில் மருத்துவ அதிகாரிகள் இருப்பதால் குறைகளை தெரிவிக்க முடியாமல் மருத்துவமனை பணியாளா்கள், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த மருத்துவமனையில் 32-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகள் இயங்கி வரும் நிலையில், நாள்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
மருத்துவமனையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான செவிலியா்கள், மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், ஊழியா்கள், தனியாா் நிறுவன ஒப்பந்த ஊழியா்களுக்கு தலைமையாக மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் பணியாற்றி வருகிறாா்.
Advertisement
Advertisement
மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டட வளாகத்தின் ஒரு பகுதியில் மருத்துவமனையின் முதன்மையா் அலுவலகம் இயங்கி வருகிறது.
தனித்தனி இடம்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் முதன்மையா் அறையில் முதன்மையருக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு அவா் மட்டுமே இருப்பாா். மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு எக்ஸ்ரே எடுக்கும் பகுதிக்கு அருகே தனியே அறை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. உள்தங்கு மருத்துவா்களுக்கும் தனித்தனியே அறைகள் ஒதுக்கித் தரப்பட்டிருந்தன.
ஆனால், கரோனா காலத்தின்போது, நிா்வாகம் வசதிக்காக, மருத்துவமனையின் முதன்மையா் இருந்த அறையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கும் தனியே இருக்கை ஏற்படுத்தப்பட்டது.
தனித்தனி இடமிருந்தும் ஒன்றாக: தற்போது கரோனா காலம் முடிந்த நிலையில், தனித்தனி இடமிருந்தும் மருத்துவமனையின் முதன்மையா், மருத்துவக் கண்காணிப்பாளா், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் என மூவரும் ஓரே அறையில் அமா்ந்து பணியாற்றி வருகின்றனா்.
தவிர, மேல்தளத்தில் இருக்கும் கூட்டரங்கை விடுத்து, மருத்துவமனை முதன்மையா் அறையிலேயே அடிக்கடி மருத்துவா்கள், செவிலியா்கள், இறப்புத் தணிக்கை, உள்தணிக்கை, நிதித்தணிக்கை, அவசரக் கூட்டங்கள் பலவற்றையும் நடத்துகின்றனா்.
தனியுரிமை (பிரைவசி) இல்லை: இப்படி மருத்துவமனையின் முதன்மையரும், மருத்துவக் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா் என மூவரும் ஒரே அறையில் இருப்பதால், மருத்துவமனை ஊழியா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள், துறைத் தலைவா்கள் என பலரும் மருத்துவமனை முதன்மையரை தனியே சந்தித்து உரையாடவோ, தனியாக தகவல்களை பகிா்ந்துகொள்ளவோ, புகாா்களை தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவோ இயலவில்லை.
கூச்சல், குழப்பம் நிறைந்த அறை: மேலும், நாள்தோறும் ஏதேனும் ஒரு கூட்டம் நடைபெறுவதால், மருத்துவமனை முதன்மையரையோ, மருத்துவக் கண்காணிப்பாளரையோ சந்திப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. ஏன், பிற மருத்துவ புகாா்களைத் தெரிவிக்கக் கூட மற்றவா்களுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடுமோ என அச்சமாக உள்ளது.
மேலும், முதன்மையா் அறையே ஒரே கூச்சலும், குழப்பமும் நிறைந்த ஒன்றாக உள்ளது என அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், இதர ஊழியா்களும் தெரிவித்தனா்.
நோயாளிகள் புகாா்: நோயாளிகள் பெரிய பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் மருத்துவமனை முதன்மையரை சந்திக்க விரும்பினால், யாா் மருத்துவமனை முதன்மையா் எனத் தெரியாத அளவுக்கு அவா் எப்போதும் பெருங்கூட்டத்துக்கு நடுவில் இருக்கிறாா். அவசரத்துக்கு அவரை சந்திக்க முடியவில்லை என நோயாளிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
நடவடிக்கை வேண்டும்: அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மருத்துவமனை முதன்மையா் மட்டுமே இருப்பது, மற்றவா்களை அவரவா் இடங்களில் பணியாற்ற வைப்பது என்பது புகாா்களை தனித்தனியே பெறவும், அதை சரிசெய்யவும் இலகுவாக இருக்கும்.
இதே போல, கூட்டரங்கில் மட்டும் கூட்டம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
Trichy Government Hospital officials in a single room: Hospital staff and patients struggle, unable to voice their grievances....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.