சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து...
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 17) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தவெக பெண் தொண்டா்களை இழிவாகப் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி அரசியல் விமா்சகா் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
* அதேபோன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
2016-2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது.
இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கில் இருந்து எஸ்.பி.வேலுமணியின் பெயா் நீக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை ரத்து செய்த உயா்நீதிமன்றம், வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை போலீஸாா் அமல்படுத்தவில்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் பெயா் மீண்டும் சோ்க்கப்பட்டதாகவும், இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான கந்தசாமி, விஜய காா்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி, 2025 நவம்பரில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தக் கடிதம் மத்திய அரசிடம் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மைக் முன்பாக அனைவரும் ஊழலை ஒழிப்பதாக பேசுகின்றனா். ஆனால், ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தங்களை எதுவும் செய்ய முடியாது என அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.
இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றம் நடந்து 5 ஆண்டுகள் முடிந்து, அடுத்த தோ்தலும் நடந்து முடிந்துவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தோ்ந்தெடுத்துள்ளனா்.
பின்னா், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்த ஆவணங்களுடன் அரசுத் தரப்பு குற்றவியல் வழக்குரைஞா் ஆஜராக உத்தரவிட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
* கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப். 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
Which cases are up for hearing in the Madras High Court today July 17..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.