FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்துவது குறித்து...

Updated On : 26 ஜூலை 2026, 4:26 pm IST
பகிர்:

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.

இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025 - 26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

குழந்தைகளின் பதற்றம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும்  பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும். 16 முதல் 24 வயது பிரிவினர்தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்புகூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள், மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும்போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டு, அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரியவர்களுக்கே இந்த பிரச்னை இருக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.

சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாகக் கருதுகின்றனர். இதனால் உடல் பருமன், விட்டமின்-டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து  குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பதுதான் தீர்வாகும்.

கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்தியாவில்  தொலைத்தொடர்பு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31 ஆம்  பொருளாக இடம்பெற்றுள்ளது. அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

summary

PMK Leader Anbumani urges a ban on children using social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments