நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்கும் மசோதாவை எதிர்த்து கனிமொழி பேசியது...
நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி வியாழக்கிழமை பேசினார்.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் ’தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா - 2026’ மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் இன்று விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் விவாதம் நடத்தாமல் சட்டத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
அப்போது திமுக எம்பி கனிமொழி சட்டத்தை எதிர்த்து பேசியதாவது:
”நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கிறோம். ஹிந்துத்துவ கொள்கையை அமல்படுத்தும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், கூட்டாட்சி முறைக்கு எதிராகவும் உள்ளது.
நாட்டின் தலைவர்கள் வந்தே மாதரம் பாடலின் 2 பத்திகளை அங்கீகரித்த நிலையில், இன்று 6 பத்திகளையும் பாடுவது கட்டாயம் என்றும், இல்லையென்றால் தண்டனைக்குரிய குற்றம் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் மாநிலப் பாடலுக்கு கடந்த 50 ஆண்டுகளாக முன்னுரிமை அளித்து வருகிறோம். தற்போது மாநிலப் பாடலை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கிறது இந்த அரசு. இந்த மசோதாவானது, மாநிலப் பாடல்கள் உள்ள பல மாநிலங்களை அவமதிக்கும் செயலாகும்.
இந்த நாட்டை ஏன் பிரிவினைப்படுத்துகிறீர்கள்? உங்களை எதிர்ப்பவர்களை எல்லாம் தேச விரோதிகள் எனக் கூறுகிறீர்கள். இந்த மசோதா மூலம் மக்கள் மத்தியில் வந்தே மாதரம் பாடலை திணிக்கும் பாஜக அரசுதான் தேசவிரோதி.
மேலும், இந்த மசோதாவை விவாதிக்காமல் நிறைவேற்றுவது என்பது ஜனநாயகத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் எதிரானது” எனத் தெரிவித்தார்.
It is the BJP that divides the country—they are the anti-nationals! Kanimozhi in the Lok Sabha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.