நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லை; மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றம்! காங்கிரஸ்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரையொட்டி காங்கிரஸ் கூட்டம்...
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை என்றும் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எடுத்துரைக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வியூக வகுப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ்,
"நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 19 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் 16 நாள்கள் நாடாளுமன்றம் இயங்கும். இந்த கூட்டத்தொடரில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அதேவேளையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவகாரங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மோடி அரசு கூறுகிறது. ஆனால், நடைமுறையில் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதில்லை. மாறாக, மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன. மோடி அரசின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
நாங்கள் முன்பே கூறியுள்ளபடி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறையை அரசு அமல்படுத்த வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவை அளிக்கும்.
ஆனால், மோடி அரசோ பெண்கள் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை (delimitation) மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் இதற்கு முன்பும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இனியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும்.
மேலும் ராமர் கோயில் விவகாரம், நீட் தேர்வு, இ20 பெட்ரோல் முறைகேடு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளை நாடாளுமமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
BJP govt should implement women reservation on the existing 543 Lok Sabha seats: congress
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.