முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! எம்.பி. சீட் கேட்கப்பட்டதா?
முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு பற்றி...
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸுக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு இடம் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அமைச்சர்களாக காங்கிரஸைச் சேர்ந்த பி. விஸ்வநாதனும், எஸ். ராஜேஷ் குமாரும் பதவியேற்றனர்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, திமுக - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிய போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த ப. சிதம்பரம் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்தார்.
தேர்தலுக்கு பின்பு முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்காமல் இருந்த ப. சிதம்பரம், இன்று முதல்முறையாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இவர்கள் இருவரும் கிட்டத்திட்ட 20 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் மாநிலங்களவை பதவிக்கு காலியாக உள்ள ஓா் இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்க முதல்வர் விஜய்யிடம் ப. சிதம்பரம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றே தொடங்கிய நிலையில், இன்னும் தவெக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
தேர்தலுக்கு முன்னதாக திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை பெற்ற காங்கிரஸ், 2028-ல் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மற்றொரு இடம் கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.