பிரதமர் மோடியைச் சந்திக்கும் அண்ணாமலை?
பிரதமர் மோடியைச் சந்திக்கும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி...
தில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, 2019-இல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டார்.
ஒரே நேரத்தில் திமுக - அதிமுகவுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலை, 2022-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவை தனித்துப் போட்டியிடவைத்து 5 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்தார்.
Advertisement
Advertisement
2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் தனி அணியை உருவாக்கி, அந்த அணி 18 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பாஜகவுக்கு 11.3 சதவிகித வாக்குகள் கிடைத்தன. ஆனாலும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஒரு மக்களவைத் தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.
இதன் தொடர்ச்சியாக, 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்தபோது, தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இது தமிழக பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. 27 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
பாஜகவின் இந்நாள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் நயினார் நகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், இணையமைச்சர் எல். முருகன் என அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை அண்ணாமலை தொடங்கவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. தில்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தில்லியில் இன்று (ஜூன் 4) பிரதமர் மோடியைச் சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்று அண்ணாமலை பிறந்தநாள் என்பதால், அவர் பிரதமரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் முடிவுக்காக அண்ணாமலை காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்கப்பட்டதா?, பிரதமர் மோடியின் இறுதி முடிவு என்ன? என்பது இன்று பாஜக தலைமை அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய இயக்கம் தொடங்குவது குறித்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தில்லியில் இருந்து நாளை தமிழகம் திரும்புவார் என்றும், நாளை சென்னை திரும்பியதும் முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.