ஹார்ட் டிஸ்க் மாயம்: யாரையோ காப்பாற்றும் சதி! பழனிசாமி குற்றச்சாட்டு!
மின்வாரியத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் யாரையோ காப்பாற்றும் சதி இருப்பதாக எடப்பாடி கே. பழனிசாமி குறிப்பிட்டிருப்பது பற்றி...
தமிழ்நாட்டில் மின்வாரியத் தலைமை அலுவலகத்திலிருந்து ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் யாரையோ காப்பாற்றும் சதி இருப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணாசாலையில் இயங்கி வரும், தமிழ்நாடு மின்வாரியத் தலைமையக அலுவலகத்தில் முக்கியக் கோப்புகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனதாக இன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியைக் காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி? ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார் பழனிசாமி.