லஞ்ச புகாருக்கு விரைவில் கட்டணமில்லா எண்! ஆதவ் அர்ஜுனா
பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...
பொதுப்பணித் துறையில் இனி யாரும் லஞ்சம் கொடுத்து பணிகளைப் பெற வேண்டிய அவசியம் ஏற்படாது என விளையாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதர் அர்ஜுனா இன்று (ஜூன் 4) தெரிவித்தார்.
கமிஷன் வேண்டாம் என்றும் பணிகளின் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது எனவும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சென்னை சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (ஜூன் 4) ஆலோசனை நடத்தினார்.
Advertisement
Advertisement
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
''பொதுப்பணித் துறை டெண்டரில் இனி வெளிப்படத்தன்மை பின்பற்றப்படும். பொதுப்பணித் துறை பணிகளை மேற்கொள்ள லஞ்சம் வேண்டாம். கமிஷனை தவிர்த்துவிட்டு பணிகளின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
யாராவது லஞ்சம் கேட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம். லஞ்ச புகாருக்காக விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
பொதுப்பணித் துறை பணிகளை ஆய்வு செய்ய சிங்கப்பூர் மற்றும் தில்லியில் இருந்து அதிகாரிகள் வருவார்கள். பணிகள் தரமாகவும், குறித்த காலத்துக்குள்ளும் முடிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில், பணித் தொகையில் 20% லஞ்சம் ஆட்சியாளர்களுக்கு கொடுத்து வந்ததாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.