அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்”... இது பாஜகவின் உத்தி: பெ. சண்முகம் விமர்சனம்!
அண்ணாமலையின் இயக்கம் பாஜகவின் புதிய உத்தி என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் விமர்சனம்.
அண்ணாமலையின் இயக்கம் தமிழ்நாடு பாஜகவின் புதிய உத்தி என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி புது இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் இயக்கத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அண்ணாமலையின் இயக்கம் குறித்து விமர்சித்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பெ. சண்முகம், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ். ஏற்கனவே 2,500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2,501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.