பாஜக மாநில துணைத் தலைவர் விலகல்... ‘அண்ணாமலைக்கு அணிலாக இருப்போம்’ என பேட்டி!
தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கட்சியிலிருந்து விலகியுள்ளதைப் பற்றி...
தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி புது இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
‘இது நம்ம இயக்கம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ள அண்ணாமலையின் இயக்கத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இன்று மாலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 7.70 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த கரு. நாகராஜன், மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளனர்.
இதுதொடர்பாக கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு குடும்பத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. உருவானால் அடுத்த முறை வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிரந்தரமாக ஒரு குடும்பத்தினர் மட்டும் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை.
இந்த அமைப்பில் ஆறு லட்சத்துக்கும் மேலான மக்கள் தானாக முன்வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தமிழ்நாடு மக்களின், இளைஞர்களின், பெண்களின், தாய்மார்களின் ஆதரவு பெற்ற அண்ணாமலைக்கு நாங்களும் அணில் போன்று உதவி செய்ய பாஜகவிலிருந்து விலகி அவருடைய இயக்கத்தில் இணைந்திருக்கிறோம்.
தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கின்ற அறிவுசார்ந்த தலைமை அண்ணாமலையிடம்தான் இருக்கிறது. ஆற்றமிக்கத் தலைவராக குக்கிராமங்கள் வரை பாஜகவைக் கொண்டு சென்றவர் அண்ணாமலை.
தில்லியிலிருந்து வரும் தலைவர்கள் இங்கு பேசுவதை மக்கள் புரிந்து கொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில் அண்ணாமலைக்கு அதிகளவிலான பின்தொடர்வோர்கள் இருக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் துணிச்சலாகப் பேசக்கூடியவர் அண்ணாமலை. அவரைப் போன்றவர்களைத்தான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.