ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு! திருச்சி கிழக்கில் போட்டியா?
ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு குறித்து...
வரும் ஜூன் 11 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு தவெக தலைவா் விஜய் வெற்றி பெற்றார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை விஜய் ராஜிநாமா செய்திருந்தார்.
இதனால், இந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அனைவருக்கும் வணக்கம், திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த யூகங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.
தற்போது நான் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணிகள் வரும் ஜூன் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.
என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் ஜூன் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.