முகப்பு
தமிழ்நாடு

மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பற்றி...

Updated On : 8 ஜூன் 2026, 11:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ‘ஹாா்டு டிஸ்க்’குகள் (தரவு சேமிப்பு சாதனங்கள்) திருடப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சில நாள்களுக்கு முன்பு அங்கிருந்த கணினிகளின் ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ திருடப்பட்டன.

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரி லலிதா, கடந்த 1-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கணினி பராமரிப்பு பொறியாளராக கடந்த ஓராண்டாக பணியாற்றிய அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (31) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கோபிநாத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் அந்த ஹாா்டு டிஸ்க்குகளை விற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினா் கோபிநாத்தை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்றனா். அங்கிருந்து 34 ஹாா்டு டிஸ்க்குகள் கணினி இயக்கத்துக்கு பயன்படுத்தப்படும் 20 ‘ராம்’-கள் ஆகியவை மீட்கப்பட்டன.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹாா்டு டிஸ்க்குகளே திருடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீதியுள்ள 16 ஹாா்டு டிஸ்க்குகளை வேறு நிறுவனங்களில் கோபிநாத் திருடியிருந்தது விசாரணை மூலம் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தெற்கு பெங்களூரு பகுதியில் கணினி கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் முரளி மனோகா் (32) என்பவரையும் கைது செய்தனர்.

ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகாா்கள் எழுந்துள்ள நிலையில், தரவுகளும்,தகவல்களும் நிரம்பிய ‘ஹாா்டு டிஸ்க்குகள்’ திருடப்பட்டது, அவற்றை மறைப்பதற்காகவா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

இதன் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை சோ்ந்த யாருக்கும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறும் நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பிரிவினருக்கு மாற்ற தமிழ்நாடு டிஜிபியிடம் சென்னை மாநகர காவல்துறை பரிந்துரைத்தது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி, தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

summary

Electricity Board hard disk theft case transferred to CB-CID!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.