சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினை வெளியீடு!
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று வெளியிட்டார். அதன் சிறப்புகள் குறித்து...
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினையை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 9) வெளியிட்டார். இதனை சிங்கப்பெண் அதிரடிப் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
இலச்சினையில் சிங்கம் ஒருபுறமும் மற்றொருபுறம் சிங்கப் பெண் என்பதைக் குறிக்கும் வகையில் தொப்பி அணிந்தவாறு பெண் காவலரும் இடம்பெற்றுள்ளார். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற வாசகம் இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜூன் 9) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
Advertisement
சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இன்று இத்திட்டம் வெற்றிகரமாக தொடக்கிவைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படைக்கான சிறப்பு ரோந்து வாகனங்களையும் முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்.
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட சீருடை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்தப் படையினருக்கு பிரத்யேகமான சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் வழங்கப்பட்டுள்ளது.